Cinema

ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவு உண்டு…விஷன் சினிமா ஹவுஸின் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

படத்தின் தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக பயணித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேற்பட்ட கால்ஷீட், நான்கு கட்டமாக நடந்த படப்பிடிப்பு, எண்ணற்ற நினைவுகள் என நீண்ட பயணத்திற்குப் பிறகு, படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குள் நுழைந்துள்ளது.

விஷன் சினிமா ஹவுஸ் பேனரின் கீழ் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரித்த ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கேரளாவின் எருமேலி பகுதியில் தொடங்கியது. கேரளாவின் பசுமையான பகுதிகள்,கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் மூன்று பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டதோடு, ஸ்பென்சர் பிளாசா, அண்ணா சாலை (மவுண்ட் ரோடு), ஆச்சி ஹவுஸ், பெருங்குடி மற்றும் அடையார் பாலம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையின் ஈசிஆர் கோவளம் கடற்கரைப் பகுதியில் நிறைவடைந்தது.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறுகையில், “‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது எங்கள் அனைவருக்கும் திருப்திகரமான தருணமாகும். இந்தக் கதையை ஆரம்பம் முதலே நம்பி, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்களான டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்துவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் நம்பிக்கையால்தான் நாங்கள் நினைத்தபடியே இந்தப் படத்தை உருவாக்க முடிந்தது. ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘ஹைக்கூ’ திரைப்படம் ரசிகர்களுக்கு மனதை வருடும், இதமான, தென்றல் போல இலகுவான, உணர்ச்சிப்பூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. அதை விரைவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறோம். ஒரு இயக்குநரின் கனவுகளை நனவாக்க தயாரிப்பாளரின் ஆதரவு மிக அவசியம். அந்த வகையில், சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்ட எனது தயாரிப்பாளர் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். எதிர்காலத்தில் பல இளம் இயக்குநர்களுக்கு விஷன் சினிமா ஹவுஸ் வாய்ப்பளிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்றார்.

தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து பகிர்ந்து கொண்டதாவது, “‘ஹைக்கூ’ திரைப்படம் முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆரம்பம் முதலே இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இந்தப் படத்தை மிகத் தெளிவான பார்வையுடனும் நேர்மையான அணுகுமுறையுடனும் உருவாக்கினார். அவர் மீது முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஒவ்வொரு கட்ட படப்பிடிப்பிலும் தங்களது முழு அர்ப்பணிப்பை கொடுத்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்றியது அருமையான அனுபவம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தவுடன் இதை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம். தரமான படைப்பும், திட்டமிட்ட நேரத்தில் அதை நிறைவு செய்வதும்தான் தயாரிப்பாளருக்கு உண்மையான மகிழ்ச்சி. இதனை இயக்குநர் யுவராஜ் சின்னசாமி சரியாக செய்து முடித்தார். இயக்குநராக அவருக்கு எதிர்காலத்தில் இன்னும் பல சிறப்பான வெற்றிகள் காத்திருக்கின்றன என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றனர்.

படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே ‘ஹைக்கூ’ திரைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதன் திரையரங்கு வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பிரீமியம் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. தற்போது டிஜிட்டல் உரிமைகள் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் சூழலில், படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பது இப்படத்தின் கதை மீது வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அனைவரையும் இணைக்கும் பொதுவான இந்த கதை, மொழி மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நடிகர்கள்: ஏகன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், மைம் கோபி, ‘மெய்யழகன்’ புகழ் இந்துமதி, ‘லப்பர் பந்து’ புகழ் ஜென்சன், ‘சிறை’ புகழ் இஸ்மத்தா பானு, ‘டாக்டர்’ சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுத்து, இயக்கம்: யுவராஜ் சின்னசாமி,
கூடுதல் திரைக்கதை: ஹரி ஹரன் ராம்,
ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி,
படத்தொகுப்பு: சக்தி பிரணேஷ்,
இசை: சித்து குமார்,
கலை இயக்கம்: பிரேம்

பிரபலங்கள் இல்லை… டிஜிட்டல் வெளியீடும் இல்லை… ‘என்ன விலை’ திரைப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட கிராமம்!

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் முதல் பார்வையை பெரும்பாலும் பிரபலங்களோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியிடுகின்றனர். ஆனால், இதற்கு மாறாக ’என்ன விலை’ திரைப்படக் குழு வித்தியாசமான முறையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்ட தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களை வைத்து முதல் பார்வையை வெளியிட்டனர். படப்பிடிப்பு முழுவதும் தங்களை அன்புடன் வரவேற்று ஆதரவு கொடுத்த அந்த கிராம மக்களே ஒன்றுகூடி, ’என்ன விலை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். இது வெறும் விளம்பர நிகழ்வாக இல்லாமல் கிராம மக்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக மாறியது.

கிராம மக்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாலையில் விழா கோலாகலமாகத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. பின்னர் படக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் கலந்துரையாடி மகிழ்ந்தனர். இறுதியில், பாரம்பரிய கிராம விருந்துடன் விழா நிறைவடைந்து. இது அனைவருக்கும் மறக்க முடியாத மகிழ்வான மாலையாக அமைந்தது.

கலாமயா சினிவர்ஸ் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனு கோபால் வேணுகோபாலன் தயாரித்திருக்கும் ’என்ன விலை’ திரைப்படத்தை சஜீவ் பாழூர் எழுதி இயக்கியுள்ளார். சமூக, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த குடும்ப த்ரில்லர் திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஒய்.ஜீ. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன் ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இந்தத் திரைப்படம் வென்று பெருமை சேர்த்துள்ளது. இதனால், படத்தின் திரையரங்கு வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர் ஜித்தேஷ் பகிர்ந்து கொண்டதாவது, “ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆனால் நன்றியுணர்வோடு தொடங்கும் வாய்ப்பு சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும். பெரும்பாலான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பிரபலங்களாலோ அல்லது டிஜிட்டல் தளங்களிலோ வெளியாகிறது. ஆனால், இந்தத் திரைப்படத்திற்கு அளவற்ற அன்பும் ஆதரவும் கொடுத்த பாலம் கிராம மக்களே எங்கள் படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இது ஒரு விளம்பர நிகழ்வு மட்டுமல்ல, அவர்களுக்கு நாங்கள் தெரிவித்த மனமார்ந்த நன்றியாகும்” என்றார்.

இயக்குநர் சஜீவ் பழூர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது கதைக்கான இடத்தை தேர்வு செய்வோம். ஆனால், சில நேரங்களில் அந்த இடமும், அங்கு வாழும் மக்களும் அந்தக் கதையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகின்றனர். ‘என்ன விலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பாலம் கிராம மக்கள் எங்களை குடும்பமாக அரவணைத்தனர். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைச் சந்திப்பதற்கு முன், இந்த திரைப்படம் முதலில் அவர்களுக்கே சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, என்றென்றும் எங்களுக்கு மகிழ்ச்சியான நினைவு” என்றார்.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, ’என்ன விலை’ திரைப்படம் தனது முதல் ரசிகர்களை கண்டுபிடித்துவிட்டது. இந்த திரைப்படத்தை தங்களுடையதாக ஏற்றுக்கொண்ட பாலம் கிராம மக்கள்தான் முதல் பார்வையாளர்கள். அவர்களை கௌரவிப்பதன் மூலம், இந்த திரைப்படத்தின் பயணம் சமூக ஒற்றுமை மற்றும் இனிய நினைவுகளுடன் தொடங்கியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button