CinemaNews

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. வினையும் எதிர்வினையும் பற்றி வெளிப்படுத்தும் படம் ‘அறுவடை!’

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. வினையும் எதிர்வினையும் பற்றி வெளிப்படுத்தும் படம் ‘அறுவடை’

‘லாரா’ புகழ் கார்த்திகேசன் நடித்து தயாரித்து இயக்கும் படம் ‘அறுவடை’

ஆன்மீகம் தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி ,’நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்’ என்கிறது.சுருக்கமாக ‘விதைத்ததையே அறுப்பாய்’ என்கிறது.

அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது நியூட்டனின் மூன்றாவது விதி இது பற்றிக் கூறும்போது, ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்று கூறுகிறது.
ஒவ்வொரு செயலுக்கும் உள்ள எதிர்வினை பற்றித் தான் ‘அறுவடை’ படம் பேசுகிறது.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம்தான் ‘அறுவடை’.ஆக அறுவடை என்கிற இந்தப் படத்திற்குத் தலைப்பாக வந்திருக்கிற சொல் செயலுக்கான எதிர்வினையைக் குறிக்கிறது எனலாம்.

இந்த ‘அறுவடை’ திரைப்படத்தை எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம் .கார்த்திகேசன் தயாரித்துள்ளார்.படத்தை அவரே இயக்கியது மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக வேடமேற்று நடித்தும் இருக்கிறார்.
இவர் ஏற்கெனவே ‘லாரா’ படத்தைத் தயாரித்திருந்தார் .அதில் அவர் ஏற்றிருந்த போலீஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது. ஒரு நடிகராக அவர் ‘ஒண்டிமுனி’ என்கிற படத்திலும் வில்லனாக செய்து கவனத்தைப் பெற்றவர்.

இப்படத்திற்கு
பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தைப் பற்றி நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திகேசன் கூறுகையில்

“இந்த ‘அறுவடை’ திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது,அதில் நடித்தவர்கள் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்வேன். இதில் கதாநாயகியாக நடித்துள்ள சிம்ரன் ராஜ் இப்படத்திற்குப் பிறகு கவனிக்கப்படுவார்.
படத்தின் சில காட்சிகளை வாகனங்கள் செல்லக்கூட முடியாத காடுகளுக்குள் சென்று படப்பிடிப்பை நடத்தினோம் .அப்போது உடை மாற்றுவதற்குச் சிரமங்கள் இருந்த போதும் படத்தின் நாயகி சிம்ரன் ராஜ் அதைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைப்பு கொடுத்தார்.
சற்றும் தாமதமாகாமல் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்புக்கு வருவார். அவருடைய இந்தக் குணமும் இந்தப் பண்பும் நிச்சயம் அவரைத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாகக் கொண்டு வரும் .
அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நடிகர் கஜராஜ் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.பருத்திவீரன் சரவணன் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார்.அவரது அனுபவம் நடிப்பில் தெரியும்படி காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எதிர்பாராத விதமாக நடிகர் ராஜ சிம்மனுக்குக் காயம் ஏற்பட்டது படப்பிடிப்பை அன்று நிறுத்தி வைக்கலாம்
என்று முடிவு செய்தோம். ஆனால் ராஜசிம்மன் படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் சற்று நேரத்தில் சரியாகிவிடும் என்று சொல்ல அதன் பின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. அவரும் அந்தச் சண்டைக்காட்சியில் சிறப்பாகச் செய்து கொடுத்தார்.அதேபோல
பாபுஸ் பாபுராஜ் நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் பேசும் படியாக இருக்கும்.இப்படி நடிப்புக் கலைஞர்கள் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்ததை மறக்க முடியாது.

ஏற்கெனவே நான் தயாரித்த ‘லாரா’ படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தேன். அதற்கு ஊடகங்களிடம் பாராட்டு கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு நடிகனாக நான் நடித்திருந்த ‘ஒண்டிமுனி’ படம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது .நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் ஒரு நடிகனாக நான் தொடர்ந்து நடிப்பேன்.
இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அனைவரும் அவர்களுடைய பணியை மிகவும் சிறப்பாகச் செய்துள்ளனர். படம் சிறப்பாக வந்ததை அடுத்து படக் குழுவினர் உற்சாகமாக இருக்கிறோம் “என்று கூறினார்.

‘அறுவடை’ படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிந்தைய தொழில்நுட்ப மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
கோடை விடுமுறையை ஒட்டி வெளியிடும் திட்டத்தில் படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button